காணவில்லை ....முதலைகளை....
போன செவ்வாய் இரவு வந்த அறிவிப்பைக் கேட்டு முதலில் அதிர்ச்சி...
பிறகு ஞானோதயம் ...."நாம எதுக்கு அதிறணும்...
நமக்கு கணக்கில் வராதது ஒண்ணு மில்லயே..."
"பண முதலைகள் தான் கவலைப் படணும் "
கையோடு ,பீரோ ,பெட்டி,டிராயர் ,பர்ஸ் ,ஹாண்ட் பாக் ,தலைகாணிக்கு கீழே ,டைரிக்குள்,சாமி உண்டியல் ,சிறுவாடு டப்பா ,கடுகு டப்பா ....
என்று வீடு முழுக்க ஒரு ரெய்டு நடத்தி
கிடைத்த 1000,500 களை பத்திரமாக எண்ணிக் கட்டி (முதல் வாரமில்லையா ,பெரிய நோட்டுக்கள் தான் நிறைய ....)
எங்கோ இடுக்கு மூடுக்குகளில் சில ஆபத்வாந்தவ சில்லறை நோட்டுக்கள் சிரித்தன...
பெரிய நோட்டுக்களை எண்ணி ரப்பர் பேண்ட் போட்டு கட்டி,challan எழுதி வைத்து
வியாழக்கிழமை காலையிலேயே வங்கிக்கு கிளம்பி , கியூவில் கால் கடுக்க நின்று உச்சி வேளையில் பணத்தை சந்தோஷமாக கட்டிவிட்டு (போன வாரம் 2 நிமிடத்தில் எடுத்தது!!!!!)
பக்கத்துக்கு கியூவில் இன்னும் ஒரு மணி நேரம் நின்று 5 ரோஜா அழகிகளை (2000 ருபாய் நோட்டுக்கள்) புது வாசனை மாறாமல் வாங்கி வந்தேன்...
(அதற்க்கு இன்று வரை சில்லறை கிடைக்க வில்லை என்பது வேறு கதை)
நான் நின்றிருந்த கியூவிலும் ,
என் உறவு,நட்பு,அக்கம் பக்கம் நின்ற வரிசையிலும்
டீ.வி இல் நாள் முழுவதிலும் காட்டப் படும் பல வங்கி /எ.டீ.எம் கியூக்களிலும்
கால் கடுக்க ,வியர்வை ஒழுக கையில் சில பல நோட்டுகளுடனோ /நோட்டுக்களுக்ககவோ தவமாய் தவமிருப்பவர்கள்
சாமானியர்கள் மட்டுமே...
அவர்கள்....பண முதலைகள் இல்லை....
பணத்திமிங்கலங்கள் இல்லை ....
பண டினோசார்கள் இல்லை...
பண அனகோண்டாக்கள் இல்லை......
அம்பானி,அதானி,டாட்டா ,பிர்லாக்கள்
எந்த பாங்கில் இருந்து கைச் செலவுக்கு பணம் எடுத்தார்கள்....
அமைச்சர்கள்,நடிகர்கள், VIP க்கள் எந்த ஏ டீ எம் களில் காசு வாங்கினார்கள்....
தெரியலையே....
ஒரு பண முதலை கூடவா வங்கி முன் நிற்பதை நம்ம மீடியாக் காரர்கள் கவனிக்கவில்லை....
தெரிந்தால் சொல்லுங்களேன் ....
எனக்கு இப்போது எங்கோ படித்த கதை தான் ஞாபகம் வருகிறது.....
ஒரே ஒரு ஊரில்
ஒரு குளம் இருந்தது....
அந்தக்குளத்தில் சில முதலைகளும் வாழ்ந்தன ....
முதலை வேட்டை ஆட ராஜா முடிவெடுத்தார்....
குளத்து நீரை இரைக்க உத்தரவு பிறப்பித்தார்.....
குளம் காலி செய்யப்பட்டது....
வந்து பார்த்த ராஜாவுக்கு ஆச்சரியம்...
குளத்தில் ஒரு முதலை கூடக் காணோம்....
மாறாக மீன்கள் செத்துக் கிடந்தன.....சில துடித்துக் கொண்டிருந்தன.....
"முதலை தண்ணீரிலும் தரையிலும் வாழும்....அவைகள் எங்கேயோ தப்பி ஓடி விட்டன...ஆனால் பாவம் மீன்கள் ...அவை வாழ தண்ணீர் மட்டும் தான் உண்டு"
ஊர்க்காரர் ஒருவர் சொல்ல....ராஜாவுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது .....
