badge

Followers

Saturday 9 January 2016

கோவைக்கு ஒரு எச்சரிக்கை மணி ...









சென்னையில் பெய்த அளவுக்கு,
கோவையில் கனமழை பெய்தால், அதை விட
கடும் பாதிப்பு ஏற்படுமென்ற நிலை
உள்ளதால், நொய்யல் ஓடைகள் மற்றும்
கால்வாய்களில் ஆக்கிரமிப்பும், பாலீத்தீன்
குப்பைகளால் ஆன அடைப்புகளையும்
உடனே அகற்ற வேண்டியது அவசியம்.

கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகள்,
கால்வாய்கள் மற்றும் பல்வேறு ஏரிகளில்
செய்த ஆக்கிரமிப்பும், அவற்றை மூடி,
மனைகளாக மாற்றியதன் பலனை, சென்னை
நகரம் அனுபவித்து வருகிறது.
ஓரளவுக்குக் கட்டமைப்பு மற்றும் மக்கள்
போக்குவரத்து வசதிகளைக் கொண்ட
தலைநகரமே, இத்தனை அவதிகளைச் சந்தித்து
வரும் நிலையில், கோவையில்
இதேபோன்று கனமழை பெய்தால்,
என்னவாகும் என்ற கேள்வி, எல்லோர்
மனதிலும் எழுகிறது.

சென்னையைப் போலவே, கோவையிலும்
அம்மன் குளம், புலியகுளம், வாலாங்குளம்,
பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட
பல்வேறு குளங்கள்,
அரசுத்துறைகளாலேயே மூடப்பட்டு,
கட்டடங்களாக உருமாறியுள்ளன.
துணை மின் நிலையம், போக்குவரத்துக்கழக
பணிமனை, இணைப்புச் சாலை, பாலம்,
நுகர்பொருள் வாணிபக் கிடங்கு என அரசால்
செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளே இங்கு அதிகம்.
இவற்றைத் தவிர்த்து, ஆயிரக்கணக்கான
வீடுகள், இந்த நீர் நிலைகளை ஆக்கிரமித்துக்
கட்டப்பட்டிருந்தன.

இங்கு குடியிருப்போர்க்கு, ஜவஹர்லால்
நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில்,
மாற்று வீடுகளை வழங்குவதற்காக பல
ஆயிரம் வீடுகள், குடிசை மாற்று
வாரியத்தால் கட்டப்பட்டு வருகின்றன.

வாலாங்குளத்தில், 780 வீடுகள் இடிக்கப்பட்டு,
கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முத்தண்ணன் குளம், வெள்ளலுார் ராஜ
வாய்க்கால் பகுதிகளில் உள்ள நீர் நிலை
ஆக்கிரமிப்புகளில் வசிப்போருக்கு, ‘பயோ-
மெட்ரிக்’ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாற்று வீடுகள்
வழங்கப்பட்டாலும், அந்த நீர் நிலைகளை
முழுமையாக மீட்க முடியுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.

கரையோரம் மற்றும் நீர் வழிப்பாதைகள், பல
காரணங்களால் அடை பட்டிருப்பதே, இதற்கு
முதற்காரணம்.

அரசு, தனியார் கட்டடங்கள், கடைகள்
போன்றவற்றுக்காக, ஏராளமான நீர் வழிகள்
மூடப்பட்டுள்ளன. குளக்கரைகளில்
இஷ்டம்போல, கட்டடக்கழிவுகள்
குவிக்கப்பட்டுள்ளன. நொய்யல் ஓடைகள்,
சங்கனுார் பள்ளம், கால்வாய்கள் மற்றும் நீர்
வழிப்பாதைகளை, பாலித்தீன் குப்பைகள்
அடைத்துக் கொண்டு, தண்ணீரை நகர
விடாமல் தேங்க வைக்கின்றன.
பிற இடங்கள், முட்புதர்களாலும்,
குப்பைகளாலும் மண்டிக்கிடக்கின்றன.நீர்
நிலைகளில் உள்ள குப்பைகள் மற்றும்
கழிவுகளை அகற்றவோ, பாலித்தீன்
பயன்பாட்டைக் குறைக்கவோ மாநகராட்சி
நிர்வாகம் எந்த நடவடிக்கையும்
எடுப்பதில்லை. இந்த காரணங்களால் தான்,
வெள்ளலுார் குளத்துக்கு தண்ணீர்
போவதும் தடுக்கப்பட்டு வருகிறது.
இப்போதே, கொஞ்சம் கனமழை பெய்தாலே,
கோவை நகரின் பல பகுதிகள்
வெள்ளக்காடாக மாறி,
துண்டிக்கப்படுகின்றன. சென்னையைப்
போல, தொடர் மழை பெய்தால், கோவையின்
நிலைமை என்னவாகும் என்பதை கற்பனை
செய்யவே முடியவில்லை. தலைநகரில்,
தற்போதுள்ள நிலை, கோவைக்கு
எச்சரிக்கை மணி அடிப்பதாகவே உள்ளதாக
சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போதாவது, கோவையில் நீர் நிலை
ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலித்தீன்
குப்பைகளை அகற்றி, துார் வார
வேண்டியது, காலத்தின் கட்டாயம்.ஏற்கனவே
உள்ள மழை நீர் வடிகால்களை முழுமையாக
அமைப்பதோடு, விரிவாக்கப்பகுதிகளிலும்,
இதை விரைவாக அமைக்க வேண்டியது
அவசியம். இல்லாவிட்டால், சென்னையை விட,
மிக மோசமான பாதிப்புகளை கோவை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

4 comments:

  1. அவசியமான எச்சரிக்கை பதிவு.

    ReplyDelete
  2. படம் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அவசியமான எச்சரிக்கையுடன்தான் இந்தக்கட்டுரையை எழுதியுள்ளீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதனைக் காதில் வாங்கிக்கொள்வார்களா ?

    ReplyDelete
  3. இங்கு அங்கு வந்நது போல் மழை வர வாய்ப்பு உள்ளதா ,அப்படி என்றால் முன்னெச்சரிக்கை தறுமாறு செய்யவும.

    ReplyDelete
  4. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete