badge

Followers

Friday 21 March 2014

முத்து மரம்




மாமரம்,தென்னை மரம் ,பலா மரம் 

பார்த்திருப்பீர்கள்...

ஏன் -பணம் காய் ச்சி மரம்  கூட கேள்விப்படிருபீர்கள்...

(நானும் கேள்வி தான் பட்டிருக்கிறேன்...

பார்த்ததில்லை! பாத்தால் சொல்லுங்கள் ...

நம் வீட்டிலும் ஒன்று நட்டு வைப்போம் !!!)

ஆனால்,முத்துக்கள் காய்த்துக் குலுங்கும் 

ஒரு தங்க மரத்தை பார்த்து இருகிறீர்களோ?


இதோ...

நான் செய்த முத்து  மரம் ....

செய்வது ரொம்ப  சிம்பிள் தான்...

செலவும் ரொம்ப ஆகாது...

சீக்கிரம் பழசும் ஆகாது...

(இந்த மரத்தின் வயசு 25 என்றால் நம்ப முடிகிறதா?)




இதை செய்ய தேவையான பொருட்கள்...



#ஒரு பீங்கான் கோப்பை 

#15-25 தங்க நிற அலுமினியம் கம்பிகள் 

#1 சரம் முத்துக்கள் (சாதா பிளாஸ்டிக் முத்துக்கள்)

#பிளாஸ்டர்  ஆப் பாரிஸ் -1 கப் 

#பழுப்பு  நிற அக்ரிலிக் பெயிண்ட் -சிறிதளவு  



செய்முறை 


  • கம்பிகளை இரண்டாக மடிக்கவும்.
  • கம்பியின் ஒவ்வொரு நுனியிலும் ஒரு முத்தை கோர்த்து  முது விழாத வண்ணம் முறுக்கிவிடவும்.
  • 4-5 கம்பிகளை கொத்தாக சேர்த்து ஒரு ஓரத்தை முறுக்கி கிளைகள் போல வடிவமைக்கவும்.
  • எல்லாக் கிளைகளையும் சேர்த்து கம்பிகளை கெட்டியாக முறுக்கி அடிப்பாகத்தை லேசாக விரித்து விடவும்.
  • இதை கோப்பைக்குள் பொருத்தி முதுக்கம்பிகளை மரம் வடிவத்தில் வளைத்து நெளித்து வைக்கவும்.
  • பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல் தண்ணீர் சேர்த்து  கோப்பைக்குள் ஊற்றவும்.
  • 10 -15 நிமிடங்களில் அது சிமெண்ட் போல செட் ஆகி விடும்.
  • நன்றாக காய்ந்தபின் பழுப்பு நிற வர்ணம் பூசி அதற்கு  மண் போன்ற தோற்றத்தை கொடுக்கவும்.


#அழுக்கானால் கவலை இல்லை ...அவ்வப்போது வாட்டர் வாஷ் செய்து விட்டால் பளிச் என்று புதுசு போல ஆகிவிடும்...





Wednesday 12 March 2014

என் ஐம்பதாவது பகிர்வு...பரிசு வென்றேன் .....

 




சில பகிர்வுகளில் என் கருத்துக்களை பகிர்வேன்...

சில பகிர்வுகளில் என் கைவண்ணத்தை பகிர்வேன்...

சில பகிர்வுகளில் என் கைமணத்தை பகிர்வேன்...

இதில் ,என் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன்...

முதலில்,


இது என் 50ஆவது பகிர்வு...

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் நான் கவனிக்காமல் இருந்த இந்த வலைப்பூவை இரண்டு மாதத்துக்கு முன் தூசி தட்டி மீண்டும் எழுத ஆரம்பித்ததற்கு  ஒரு முக்கிய காரணம்- 

திரு .வை.கோபாலகிருஷ்ணனின்  வலைப்பூவில் அறிவிக்கப்பட்ட சிறுகதை விமரிசனப்போட்டிதான்.

அவர் அறிவித்த  சிறுகதை போட்டியின் முதல் சிறுகதையான 

"ஜாங்கிரி" க்கு விமரிசனம் எழுதிய எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது என்னை மீண்டும் எழுதத்தூண்டியது...    http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-03-03.html


இப்போது ,அவர் எழுதிய "உடம்பெல்லாம் உப்புசீடை ..." கதைக்கு நான் எழுதிய விமரிசனத்துக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்ற தகவல் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

"உடம்பெல்லாம் உப்புச்சீடை..." நெடுங்கதையையும் ,அதற்க்கு நான் எழுதிய விமரிசனத்தையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

உடம்பெல்லாம் உப்புச்சீடை... கதைக்கான லிங்க் ....

அதற்க்கு நான் எழுதிய விமரிசனம் இதோ...




முதல் பரிசினை வென்றுள்ள 




திருமதி 



உஷா ஸ்ரீகுமார் 


 அவர்களின் விமர்சனம் இதோ:




பயணங்கள்...அறிவையும், மனதையும், கண்ணோட்டத்தையும் விசாலப்படுத்தும்...

சாதாரண பயணங்களே இதை செய்யும் போது மிகப்புனிதப் பயணமான காசி யாத்திரை இன்னும் ஒரு படி மேலே போய் மன அழுக்கை எப்படி சலவை செய்து கதை நாயகன் பட்டாபியின் மன அழுக்கை கரைத்து சுத்தப் படுத்தியது என்பதை கையளவு கதாபாத்திரங்களை வைத்து தெளிவான நடையில் கூறி இருக்கிறார் கதாசிரியர்.

தந்தையின் அஸ்தியை கரைக்க குடும்பத்தோடு காசிக்கு ரயிலில் பயணிக்கும் போது சக பயணி -சரும நோயால்  "உடம்பெல்லாம் உப்புசீடை "காய்த்து பார்க்க முகம் சுளிக்க வைக்கும் தோற்றத்துடன்...

இயற்கை தான்... இப்படி ஒரு தோற்றத்தில் உள்ளவருடன் ரயில் சிநேகம் கொள்ள நம்மில் பலரும் தயங்குவர்... அப்படி ஒருவர் தான் நம் கதை நாயகர் பட்டாபியும்...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்ற பழமொழியை பலரும் கேள்வி கேட்காமல் நம்புவதால் புற அழகு இல்லாத பலர் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறார்கள்.... அப்படிபட்டநிலையில் தான் குழந்தைகள் சட் என்று ஓட்டிகொள்ளும் அந்த "உப்புசீடை" மாமா இருக்கிறார்...

குழந்தைகளிடம் உள்ள தெய்வத்தன்மை அவர்கள் வளர வளர குறையும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் விகல்பமில்லாமல் உப்புசீடை மனிதருடன் பேசி ஸ்னேகமாகப்பழகுவதை அவர்கள் பெற்றோர் பொறுத்துக்கொள்ள  முடிவதில்லை...

காரணம்.... வயது தரும் விபரம் என்று கூட நியாயப்படுத்தலாம் - நோய் தொற்று பற்றிய பயம் / முன் பின் தெரியாதவர் தரும் பொருட்களை குழந்தைகள் மற்றும் பெரியவர்  வாங்கி உண்பதை காவல் துறையே எச்சரிக்கிறதே... அதனால் அதை எல்லாம் பட்டாபி தம்பதியரின் மிகப்பெரிய தவறுகளாகப் பார்க்க தோன்றாவிட்டாலும்...கோபத்தில் பட்டாபி அந்த சக பயணியை  புண்படுத்துவது "உப்புசீடை" காரர் மீது நமக்கு கரிசனம் வர வைத்தாலும், பட்டாபியின் பக்குவமில்லாத மனநிலையை தான் காட்டுகிறதே ஒழிய, அவரை ஒரு மிக தப்பான ஆளாக காட்ட வில்லை .
.

தந்தையின், மரணம், பயணம், நடக்கும் காரியம் நன்கு நடக்க வேண்டுமே... என்ற பல பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளும் அவர் நடத்தையை  நமக்கு புரிய வைக்கிறது...

கடைசியில்,ஒரு திருப்பம் - உப்புசீடை மாமாவின் உதவியால் தான் இவர் தந்தையின் காரியம் நடைபெறப்போகிறது... என்பது கொஞ்சம் cinematic ஆக இருந்தாலும், 

அழகு புற தோற்றம் சம்பந்தப்பட்டதல்ல.... மனம் / குணம் சம்பந்தப்பட்டது என்பதை வாசகர் மனதில் ஆணி அடித்தால் போல இறங்க உதவுகிறது.

ஆனால் தந்தையின் அஸ்தியை அந்த மனிதர் தொடும் படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பட்டாபி நாயகன் ஸ்தானத்திலிருந்து ரொம்ப கீழே இறங்கி விடுகிறார்.

கதை முடிவு எதிர்பார்தார்ப்போவே  இருக்கிறது...

படங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன .

ஒரு நல்ல கருத்துள்ள கதையை ஆசிரியர் அழகுற எழுதியிருக்கிறார்...

இந்தக்கதைக்கு விமரிசனம் எழுதும் போது ஒரு நிஜத்தை சொல்லவா -

இதே போல ஒரு உப்புசீடை மனிதரை, 10-15  வருஷம் முன் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது பார்த்தேன். இன்று வரை அந்த முகம் மறக்கவில்லை.

அப்போது எனக்கு மட்டும் அல்ல என் உடன் வந்தவர்கள், மற்றும்  மேஜை களில் உள்ளவர்கள் அனைவருக்கு  உள்ளேயும் உள்ள பட்டாபி குணம் கொஞ்சம் கொஞ்சம் தலை தூக்கி முகம் சுளிக்கவைத்தது நிஜம்.

அவர் எழுந்து போன பிறகு அங்கே ஒரு 10சதம் கலகலப்பு கூடியது என்பது உண்மை....

அதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.

Regards,
Usha

 







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.







இதை என் ஐம்பதாவது பதிவாக வெளி இடுவது மிகுந்த மகிழ்ச்சியை எனக்குத்தருகிறது...

என் வலைப்பூக்களுக்கு

தவறாமல் வந்து உடனடியாக பின்னூட்டம் அளித்து என்னை ஊக்குவித்து வரும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்...



Friday 7 March 2014

சவுக்கு மரங்கள் அழுவதில்லை...

நம்மை இன்று வரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் நகைச்சுவை மகா நடிகர் அமரர் நாகேஷின் பேட்டியை படித்தேன்...

எத்தனை ஆழமான உண்மை...

யோசித்து பார்த்தால்  நாம் எத்தனை முறைகள் சவுக்கு மரமாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறோம்...

வீட்டில்...

வேலை பார்க்கும் இடத்தில...

என்று பலமுறை இதை அனுபவித்திருப்போம்...

அப்போது நினைத்துக்கொள்வோம்...நாகேஷின்  இந்த ஆழமான சவுக்கு மரக் கதையை...

நாமும் தயாராவோம் அடுத்த பணிக்கு...





ஒரு வானொலி பேட்டியில் நாகேஷ்:

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

Thursday 6 March 2014

முந்திரிப் பருப்பு பக்கோடா







தேவையான பொருட்கள்




  • கடலை மாவு-1 கப் 
  • அரிசி மாவு-1 கப் 
  • அரிந்த  வெங்காயம் -1 
  • உடைத்த முந்திரிபருப்பு -1 கப் 
  • மிளகாய்த்தூள்-1-2 டீஸ்பூன் 
  • சமையல் சோடா -1/4 டீஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • எண்ணை -பொரிக்கதேவையான அளவு 




செய்முறை 
  1. மாவுகளுடன்  சமையல் சோடா,உப்பு ,மிளகாய் தூள் ,சிறிது எண்ணை  சேர்த்து நன்கு பிசறவும்.
  2. இத்துடன் வெங்காயம் ,முந்திரிபருப்பு சேர்த்து பிசறவும்.
  3. இதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசறவும்.
  4. சூடான எண்ணையில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு நன்கு வேக விட்டு வடித்து எடுக்கவும்.

Wednesday 5 March 2014

கொஞ்சம் பிளாஷ் பாக் .... ரீவைண்ட் செய்வோமா????


டைம் மெஷினில் ஏறி எழுபதுகளுக்கு ஒரு விசிட் அடித்து விட்டு வருவோமா?

கொஞ்சம் பிளாஷ் பாக்  ....

ரீவைண்ட்  செய்வோமா????

 அன்றைய பேஷன்- பெல் பாட்டம் ! ஊர் புழுதியெல்லாம் கூட்டிய  படி நடந்தது மறக்க முடியுமா?

பால்கனி இல்  சினிமா பார்க்கரூ . 2.90 டிக்கெட் எடுத்தது மறக்க முடியுமா?

ட்ரன்க்  கால் போட்டு காத்திருந்து ஹல்லோ ஹல்லோ  என்று போனில் கத்திய நாட்கள் மறக்க முடியுமா?

STD வசதியை எட்டாம் உலக அதிசயம் போல கொண்டாடிய நாட்களை மறக்க முடியுமா ?

10 ரூபாய்க்கு வாராந்திர கறிகாய் வாங்கிய நாட்களை மறக்க முடியுமா?


லீவ் விட்டால் போகும் ஒரே விடுமுறை ஸ்தலமான பாட்டி  வீடு ...அதுவே சிம்லா...சிங்கப்பூர் ...மறக்க முடியுமா?

ஆராதனா படம் பாதி டைலாக் புரியாவிட்டாலும் ரசித்து அர்த்தம் புரியாத ஹிந்தி பாடல்கள் பாடிய நாட்கள்...மறக்க முடியுமா?

பேங்க் வேலை...கவர்மெண்ட் உத்யோகம்,இன்சூரன்ஸ் ஜாப் பெரிய லட்சியமாக இருந்த நாட்கள்....மறக்க முடியுமா?

இன்ஜினியரிங் என்றாலே சிவில் மற்றும் மெக்கானிகல் மட்டுமே பொதுமக்கள் அறிந்திருந்த நாட்களை மறக்க முடியுமா?

அடையாரில் ஒரு கிரௌண்ட் 20000/- அநியாயம்...என்ற அங்கலாய்ப்பு மறக்க முடியுமா?

பெசன்ட் நகரில் மனுஷ சஞ்சாரமே இருக்காது...திருவான்மியூர் ஊருக்கு வெளியே அத்துவானம்...என்ற நாட்கள் மறக்க முடியுமா?

 வீடுகளில் மாடும் கன்றும் இருந்தனவே....மறக்க முடியுமா?

பிளாட்  சிஸ்டம்,அபார்ட்மெண்ட்  கெட்ட வார்த்தைகளாக இருந்த நாட்கள் மறக்க முடியுமா?

அண்ணன் படிக்கும் ஸ்கூலில் ஆட்டோமாடிக் ஆக தம்பிக்கு அட்மிஷன் கிடைத்த நாட்கள் மறக்க முடியுமா?

பர்சில் 1000/- இருந்தால்பெரும்  பணக்காரன் என்ற நாட்கள் மறக்க முடியுமா?

வீட்டில் டிவி நுழையாத நாட்கள்...எல்லோரும் ரேடியோ சிலோன் கேட்ட நாட்கள்...மறக்க முடியுமா?

அக்கம் பக்க குழந்தைகளுடன் லீவேவெல்லாம் ..ஆட்டம்..summer  camp ஆ  ?அது என்ன ?என்று வாழ்ந்த நாட்கள்...மறக்க முடியுமா?














Monday 3 March 2014

பிள்ளையார் -ஒரு வித்தியாசமான ம்யூரல்












அளவாக வெட்டப்பட்ட 

மரத்துண்டின் மீது 

சிறிய கற்கள்  பாங்காக ஒட்டி 

எம் சீல் (mseal ) கொண்டு 

சூரியன்,ஸ்ரீ,ஒம் ,போன்ற 

வடிவங்கள்  செய்து 

பொருத்தி காயவிட்டு,

எம் சீலால்  வடிவமைத்த 

பிள்ளையாரின்  முகம்,
காது,கிரீடம் ,தந்தம் 

ஆகியவைகளை  செய்து 

ம் யூரல்லை  முழுமையாக்க 

ஆணைமுகத்தனின் தும்பிக்கையில் 

ஒரு சிறு மலரை  பொருத்தி 

வைத்தேன்....

தாமிர ,பித்தளை ,வெள்ளி வர்ணங்கள் 

பூசி இதற்க்கு ஒரு antique (புராதான )

மெருகு சேர்த்து சுவற்றில் 

மாட்டி  அறைக்கு  அழகு சேர்த்தேன்...



நீங்களும்  செய்து பாருங்களேன்....

Sunday 2 March 2014

ரெயின்போ சாலட்

ரெயின்போ சாலட் 







தேவையான  பொருட்கள் 

வெள்ளரிக்காய்  -1-2
தக்காளி -2
காரட் -1
ஊதா நிற கோஸ் -1 துண்டு 
வெங்காயம் -1
பச்சை மிளகாய்-1
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன் 
ஆலிவ் ஆயில் -2 டேபிள் ஸ்பூன் 
வெள்ளை மிளகு தூள் - தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு


செய்முறை 


  • ஊதா  நிற கோசை பொடியாக அறியவும்.
  • வெங்காயம்,தக்காளி,காரட்,வெள்ளரிக்காய் ,பச்சை  மிளகாய்  ஆகியவற்றையும் பொடியாக அறிந்து கல்லவும்.
  • அனைத்தையும்  ஒரு பெரிய பௌல்/பேஸின் இல் போடவும்.
  • இதில் உப்பு ,மிளகு தூள்,எலுமிச்சை சாறு,ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கவும்.
  • 15 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

      # இது ஒரு சத்தான,ஆரோக்யமான பச்சை காய்கறி உணவு .

       #நார்சத்து மிகுந்த ,எடை குறைப்புக்கு உதவக்கூடிய  உணவு.சுவையானதும் கூட!