badge

Followers

Wednesday 29 March 2017

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!




உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!

உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.

குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும். இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.

இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். இங்கு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கருப்பு எள்ளு :-

இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

பேரிச்சம் பழம் :-

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.

ஆப்பிள் :-

ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.

வாழைப்பழம் :-

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும்.

உலர் திராட்சை :-

உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பீட்ரூட் :-

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

வெல்லம் :-

வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

தேன் :-

தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய் :-

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

பார்ஸ்லி :-

பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.

சிட்ரஸ் பழங்கள் :-

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

மாதுளை :-

மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.

தக்காளி :-

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும்.

பச்சை இலைக் காய்கறிகள் :-

பச்சை இலைக் காய்கறிகளான பசலை கீரை, அரைக்கீரை, சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Thursday 23 March 2017

வித்யாசமான பிள்ளையார்கள் - ஒரு ஸ்லைடு ஷோ



வித்யாசமான பிள்ளையார்கள் .... 
ஒரு ஸ்லைடு ஷோ

(படத்தை சொடுக்கி ஸ்லிட் ஷோவை காணவும் )

முழு முதல் கடவுளான விநாயகர்
ஒரு குழந்தை போல...
சிநேகிதர் போன்றவர்....
அதனால் தானோ என்னவோ
அவரை மஞ்சள்,களிமண் ,ஏன் ....சாணத்தில் கூட
பிடித்து வைத்து  சாதாரண அருகம் புல்லாலும் ,
எருக்கம் பூவாலும் அர்ச்சித்து வழிபட்டு  வருகிறோம்...
அது மட்டும் அல்ல...
அவரை மட்டுமே பல பல வடிவங்கள் கொடுத்து கொண்டாடுகிறோம்...

ஹாயாக  திண்டில் சாய்ந்து படுத்துக்கொண்ட பிள்ளையார்...
மூஞ்சூர் வரையும் ஓவியத்துக்கு மாடல் செய்யும் கணநாதர்...
பட்டம் விடும் பிள்ளையார்....
கனக்குப் பிள்ளை பிள்ளையார்...
பெட்டியுடன் பயணம் செல்லும் லம்போதரர்...
வீணையின் நாதமாய் இருக்கும் கணேசர்...
பிறை நிலவில் அமர்ந்தவர்...
மூஞ்சூருக்கு வைத்தியர்...
வாத்தியங்கள் இசைப்பவர்...
ஸ்கூட்டரில் பார்ப்பவர்...
லேப் டாப் இல் வேலை செய்பவர்...
இப்படி பக்தரின் இஷ்டப்படி
அவதாரம் செயது அனைவரையும் மகிழ்வித்து அருளுபவர்
இந்த விநாயகர்...
விநாயக சதுர்த்தியின் போது
அவர் எடுக்கும் பல பல நவீன அவதாரங்களில்
ஒரு சிலவற்றின் தொகுப்பே என்னுடைய
இந்த சிறு ஸ்லிட் ஷோ ...

நாராயணீயம் உருவான அருமையான வரலாறு

குருவாயூர்  அப்பனின் நாராயணீயம்  உருவான அருமையான  வரலாறு

அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல
விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே.

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி  குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு.

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார்.

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை?

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ''

'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது''

''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?''

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான்.

''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம்  செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான்.

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''

''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான்.

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான்.

''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.

''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன். நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு.

''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ''

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.

''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள்,  அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார்.  சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார்.

'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?''

'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''

'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி. நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார்.

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க,
'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.
'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம்

"ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்"

Sunday 19 March 2017

இது சாப்பாட்டு தத்துவம் !!!!!!!!




தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !

 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!

 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!

சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!

வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!!

 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!

‪🎊தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்....

‪தாமதமான‬ வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல...... அனுபவிக்க
முடியாது!!

‪தன்னம்பிக்கைச்‬  சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...
சமைப்பது உங்கள் கையில்தான்!

வெற்றி என்பது இட்லியை போல வேகுவது
தெரியாது...
வெந்தபின் தான்
தெரியும்...

 *வெற்றி* என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
நட்பு என்ற சட்னி
வேண்டும்..

#######படித்ததில்‬  ருசித்தது#######



Thursday 16 March 2017

சீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள்








சீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள் : SHIRDI SAI BABA TEMPLE - IMPORTANT INFORMATIONS !



ஸ்தல வரலாறு :

மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.

சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.

அங்குள்ள `கண்டோபா' என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.

அதிசய வேம்பு :

பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அற்புத கல் :

பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.

பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.

இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதிசய நந்தா தீபம் :

இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.

ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சத்ய நாராயண பூஜை :

இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.

உண்டியல் காணிக்கை :

கோவிலுக்கு வருபவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுப்பது போல், இங்கு வரும் பக்தர்களும் பாபாவிற்கு காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். வாரம் தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் இங்குள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் 2 கோடி ரூபாய்க்கும் ரொக்கப் பணம் மட்டும் காணிக்கையாக கிடைக்கிறது.

திருவிழா :

குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.

பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.

எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்... என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.

பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் :

குவியும் பக்தர்கள் :

இன்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் பாபாவைத் தேடி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு தினமும் 50 ஆயிரம் பேர் வருகை தருவதாகவும், விசேஷ நாட்களில் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) அவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுவதாகவும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும் சீரடி திருத்தலம் பற்றிய ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தங்கும் அறைகள் :

இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களது வசதிக்காக குறைந்த வாடகை கட்டணத்துடன் கூடிய 1,500 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

ரெயில் டிக்கெட் முன்பதிவு :

வெளியூர் பயணிகளின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே ரெயிலுக்கு முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுண்டர்களும் இந்திய ரெயில்வே சார்பில் திறக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய உணவுக்கூடம் :

திரண்டு வரும் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடமும் இக்கோவிலில் செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம். இங்கு உணவருந்த வரும் பக்தர்களுக்கு 10 ருபாய் கட்டணத்தில் பருப்புக்குழம்பு, சாதம், சப் பாத்தி, பூரி 2 வகை கூட்டு மற்றும் இனிப்புடன் தரமான சாப்பாடு வழங்கப்படுகிறது.

Thursday 2 March 2017

சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்...



 கவலைகள் விலகும்...
சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போன்று ஸ்ரீ சாய் பாபாவே அவரின் ஆதீனத்திற்கு உங்களை இழுத்து கொண்டார். உடலாலும் வாக்காலும் மனதாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும், பணிவுடனும், பாபாவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்..இவ்வாறு பாபாவிடம் சரணடைந்த பிறகு எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. உங்களுடைய கவலைகள் விலகும்...
சாயி ஸ்த்சரித்திரம்