badge

Followers

Wednesday 27 June 2018

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு




மாரடைப்பு

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!

#பகிர்வு#

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Friday 22 June 2018

திருமலையில் பூஜை தீபாராதனை நேரங்களில்ஏன் மணி அடிப்பதில்லை?




திருமலையில் பூஜை தீபாராதனை

நேரங்களில் மணி அடிப்பதில்லை

அதற்கு காரணம் என்ன?

உங்களுக்கு தெரியுமா திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை

ஏன் ! மேலே படியுங்கள் !:

காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி - தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !.
.
குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் ...
அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் !

திடுக்கிட்டு கண் விழித்த அவர் , ...தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் ........
திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு !....

பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க .....

அப்போது அசரீரியாய் ஒரு குரல் !
'' அந்த மணியை யாரும் தேட வேண்டாம் !....ஆம் ...புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் ...துப்புல் அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் !....அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் !''

அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன் !

திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,' மணியானகுழந்தையாக ' அவதரித்ததால் , திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் கூட மணி அடிப்பதுஇல்லை,

மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை என்று கூறப்படுகிறது.

ஓம் நமோ நாராயணா!!!

யாரையும் குறைத்து மதிப்பிடவேண்டாம் ...





 யாரையும்  குறைத்து  மதிப்பிடலாகாது...!!

ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.

பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.

“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே; எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார்.

இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,

“எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.

(ஆபரணங்கள் பேசுமா என்று நினைக்கவேண்டாம்)

 பகவானின் ஆயுதங்கள், மற்றும் அணி கலன்கள் ஒவ்வொன்றுக்கும் ஜீவன் உண்டு.

திருமாலின் கதாயுதமே பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வாராக பிறந்தது.

சங்கு எனப்படும் பாஞ்ச சன்னியமே பொய்கையாழ்வாராக அவதரித்தது.

திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமே பேயாழ்வாராக அவதரித்தது.

சக்கராயுதமே திருமழிசை ஆழ்வாராக அவதரித்தது.

பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார்.

பரந்தாமனின் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

திருமாலின் ஸ்ரீவத்சத்தின் (மரு) அம்சமாக பிறந்தவர் திருப்பாணாழ்வார்.

கௌஸ்துவ மணியின் அம்சமாக பிறந்தவரே குலசேகராழ்வார்.

கதைக்கு வருவோம்….

பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.

அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன். உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.

சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.

தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.

“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அதற்கு ஒப்புக்கொண்டார்.

#ஸ்ரீஇராமரின்_பாதரக்ஷைகளை_சங்கு_சக்கரங்களின்_அம்சமாகப்_பிறந்த_பரதனும்_சத்ருக்னனும்_தங்கள்_தலைமேல் தாங்கி எடுத்துச்சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.

இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’ ஸ்ரீவைஷ்ணவர்களின் தோள்களில் முத்திரையாகப் பதித்திருக்கும் சங்கு-சக்கரங்களுக்கும், தலை மீதும் சாத்தப்படுகிறது.

மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள்.

இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.

காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.

அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும்.

படித்ததை பகிர்கிறேன்....!



Monday 18 June 2018

குருவாயூர் கோயிலில் குந்துமணிக்கு என்ன சிறப்பு ???








குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

அது சரி.... குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.

அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.



அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.

ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.

கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் "என்ன ஆயிற்று..?" என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.

கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே
 ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து "நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது.

உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.

அவள் ஆசையுடன் குண்டுமணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

Friday 15 June 2018

மாங்காடு காமாட்சி அம்மன் 25 அறிய தகவல்கள்...



மாங்காடு காமாட்சி அம்மன் 25 அறிய தகவல்கள்...

1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி அன்னை முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

2. ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும், வலது காலை இடது காலின் தொடைக்கு மேற் புறமாக இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், கண்களை மூடிய நிலையில் கடும் தவம் புரிந்தார்.

3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

4. மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.

5. ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது.

6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர். கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள், அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியது தான்.

9. ஒரு கண் பார்வையிழந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

11. திருவேற்காடு கருமாரி அம்மன் மற்றும் வேதபுரிஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பஸ் வசதி உள்ளது.

12. இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

13. கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.

14. காஞ்சிபுரத்தை போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது.

15. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை.

16. திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

17. மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப் பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு கணையாழி கையில் வைத்திருக்கிறார்.

18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

19. இங்கு அர்த்தமேரு ராஜ யந்திரமாகும். இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.

20. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.

21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

22. இங்கு அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை. இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். இத்தலத்தில் காமாட்சி அம்மன் விளக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

23. இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.

24. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது.

25. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்.

Thursday 14 June 2018

ஓம் சாய்...ஸ்ரீ சாய்...



அன்பு குழந்தையே... உன் வாழ்க்கையில் எத்தனை ஏற்றமும் சறுக்கமும் ,அவற்றில் நீ பெற்றது இழந்தது என ஒரு நாள் பட்டியலிட்டு பார்த்துள்ளாய். அவற்றில் பார் நீ  பெற்றது தான் அதிகம் இருக்கும் நீ இழந்ததை காட்டிலும். ஆனால் நீயே நான் இழந்துவிட்டடேன் என்றே புலம்பிக் கொள்கிறாய். வாழ்க்கையில் உனக்கான எல்லாம் உன்னிடத்தில் வந்து சேர்ந்தன சேர்ந்தது சேரும். முதலில் வாழ்க்கையின்் மகிமையை புரிந்தக் கொள். பிறகு அதனை நன்றியுடன் ரட்சித்து பார் வாழ்க்கையில் எல்லா அம்சங்களும் தேடி வரும். ஒன்றை சொல்கிறேன் நன்றாக புரிந்துக் கொள் ஒரு பூவை பறிப்பவர்க்கு தான் அதனை எதற்கு பறிக்கிறோம் என்று தெரியும் கப்பலை ஓட்டி செல்வோர்க்கு தான் போகும் பாதையின் புதிரான வழிகள் தெளிவாக விளங்கும். அதை போலவே தான் உன்னை படைத்தவரான எனக்கு தான் தெரியும் உன் நற்பண்புகள் என்ன உனது மனம் எல்லாம். அதனால் புதிரான வழியில் கப்பலோட்டியாய் உன்னை கூட்டி அரவணைத்து செல்வேன். அப்படி என்னுடன் வரும் போது பொங்கி வரும் எல்லாம் நதியின் சங்கமத்தை பார்ப்பது கோடி புண்ணியம் அதனை உனக்கு பார்வைக்கு பாக்கியமளிப்பேன். உனது வாழ்க்கை என் பொறுப்பு. அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. நீ ஜெயமாக நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்..." ஓம் ஸ்ரீ சாய் ராம்...   

திருவேற்காடு கருமாரியம்மன்




திருவேற்காடு கருமாரியம்மன்*

 கோயில் பற்றி பார்ப்போம்,

🐉பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில் விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன், மிகப்பெரிய புற்றில் கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான். அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி.

🐉🌸சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார். 

🐉🌸அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி
☄1. அந்தரக்கன்னி,
☄2. ஆகாயக்கன்னி,
☄3.பிரமணக்கன்னி,
☄4. காமாட்சி,
☄5. மீனாட்சி,
☄6.விசாலாட்சி,
☄7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள்.

🐉🌸இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர்.


🐉🌸சக்தியாகிய கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது.

🐉🌸கருமாரி மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார். அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.

🐉🌸அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விஷேசம். மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது.

🐉🌸மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.

🐉🌸இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல், வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர்.

 🐉🌸பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்.

🐉🌸பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு.

 🐉🌸திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார்,திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும் அருகிலேயே உள்ளது.

🐉🌸அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது.

🐉🌸அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.

🐉🌸அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு.

🐉🌸கூரை வேய்ந்த கோவில் அமைத்து முதன் முதலில் கருமாரியம்மனுக்கு உருவமாக "ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்தவர் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள்.

🐉🌸தற்போது ஒவ்வொரு கருமாரியம்மனின் திருவுருவப் படத்தில் வலது புறத்தில் பானையுடன் முகம் அமைய பெற்று மற்றும் வேப்பிலையுடன் காட்சி அளிக்கிறதே அதுதான் "கரகம்". இதன் பொருள் கருமாரியம்மனின் ஆதி உருவம் "கரகம்" என்பதுதான்.

🐉🌸மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள்.
☄க - கலைமகள்;
☄ரு - ருத்ரி;
☄மா - திருமகள்;
☄ரி - ரீங்காரி (நாத வடிவானவள்)
என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது

🐉🌸மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள். இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள்.

🐉🌸அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

🐉🌸சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள் பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். தீர்த்தமும் வேப்பிலையும் தீராத நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும் இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

🐉🌸ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன.

🐉🌸திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்ணடக்கம், வெள்ளிக்காணிக்கை செலுத்தபடுகிறது.

🐉🌸ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று  வேறொரு வரலாறு கூறுகிறது.

🐉🌸புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்.
புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்.

🐉🌸ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வாரங்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள். மேலும் தை மாத பிரம்மோற்ஸவம், அமாவாசை, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி என எல்லா மாதங்களுமே அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான்.

🐉🌸காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே விளங்கி வருகிறது,

🐉🌸இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு' அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

 🐉🌸தன்னை நம்பி வரும் பெண்களுக்கு மாங்கல்ய வரமளித்து, அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது.


🐉🌸தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது, இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.

Monday 11 June 2018

கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்....



கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்....

திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.

"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.

அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.

அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக.

"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!

 மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.

பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!

பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!

இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்...
இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்....