badge

Followers

Tuesday 25 October 2016

அந்த எங்கே தீபாவளி ?



பட்டாசு கடை கடை லிஸ்ட்டை வாங்கிவந்து 

மனப்பாடம் செய்து,அதைப் பற்றி ஸ்கூல் 

சாப்பாட்டு நேரத்தில் மண்டை உடைய 

விவாதம் செய்து....


நாம் போட்ட   லிஸ்டில் பாதியை அப்பா 

அடிப்பதை திக் ...திக்... 

என்று பார்த்து,அப்பாவுக்குத் தெரியாமல் 

அம்மா,சித்தப்பாவை நைஸ் பண்ணி   இன்னும் 

கொஞ்சம் வாங்கி வந்து ....


பட்டாசை வெய்யலில் காய வைத்து ...
பத்து நாட்கள் முன்னதாகவே பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு....

"கொஞ்சூண்டு பட்டாசு "....கெஞ்சி வாங்கி ஹோம் ஒர்க் முடித்த பிறகு கொளுத்தி மகிழ்ந்து ...

விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து....

நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து

புதுத்துணி தைக்க கொடுத்து, தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி

நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் அதை வாங்கி பாழாப்போன surprise என்றபேரில் ஒளித்துவைத்திருக்க

பட்டாசை வெய்யலில் காய வைத்து ....
பக்ஷணங்கள் தயாரகும்போதே அவசர அவசரமாக உம்மாச்சிக்கு காட்டிட்டு வாயில் போட்டுக்கொள்ள.....

தாத்தாபாட்டியோடதான் தீபாவளி என்று ஆசையோடு அப்பாகூட ஜன்னல் வழியாக இடம் போட்டு பஸ்ஸில் பயணம் செய்து....
அங்கே உள்ள பழய, புதிய friends கூட ஜாலியாகப்பழகி....
பந்துக்களுடைய பாச மழையில் நனைந்து....

"தீபாவளியன்று மழை வரக்கூடாதே "என்று தெரு முக்குப்  பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்ட....

வாங்கி வந்து பட்டாசை வீட்டில் உள்ள பொடிசுகளுக்கு பெரியப்பாவோ ,தாத்தாவோ பங்கு பிரித்துத் தந் பின் மீண்டும் எங்களுக்குள் ஒரு பாகப்பிரிவினை செய்து கொண்டு... 

ம் ம் ஆச்சு போறும் சீக்கிரம் படு, விடிஞ்சா தீபாவளி, சீக்ரம் எழுந்துக்கணும் என விரட்டும் தாத்தாவுக்கு பயந்து கள்ளத்தூக்கம் தூங்க ஆரம்பித்து உண்மையாகவே தூங்கி வழிந்த.....

காலையில் 3 மணிக்கெல்லாம் பலவந்தமாக எழுப்பி பாதி தூக்கத்திலேயே தன் பழுத்த கைகளால் இளஞ்சூடோடு கூடிய பாசத்தில் பாட்டி எண்ணை தேய்த்த....

அந்த இருட்டிலே கொட்டாங்குச்சி சிரட்டையால் வெந்நீர் அடுப்பை நம் தாத்தா ஊதிக்கொண்டிருந்த...
நாம் முரண்டுபிடிக்க எண்ணைபோக சீயக்காய் பொடியை அம்மா தேய்க்க நம் கண் எரிந்த அந்த...

ஸ்வாமி முன்னாடி மஞ்சள் தடவிய புத்தாடையை பெரியவா்கள் எடுத்து தர அதை மாட்டிக்கொண்டு பட்டாசை தூக்கிக்கொண்டு தெருவில் ஓடிய.....

கூப்பிட்டு நமஸ்காரம் பண்ணச்சொல்லி, இந்தா தீபாவளி இனாம் என்று 1 ரூ. நோட்டை அப்பா தர, வாயில் சுழிக்க சுழிக்க தீபாவளி மருந்தை அம்மா ஊட்டிய....

கங்காஸ்நானம் ஆச்சா என்று கையயில் உக்காரை,லட்டு ,ரிப்பன் பக்கோடா , மிக்சருடன் பக்கத்தில் உள்ள பெரியவர்களிடம் நம்மையும் கையில் இழுத்துக்கொண்டோடிய....

அவர்கள் தீபாவளி துட்டு என்று ஆசையாக நாலணா தந்த...
காலை 6 மணிக்கெல்லாம் தீபாவளி டிபன்  இட்லியும் பஜ்ஜியும் சாப்பிட்ட..
சட சட என சரம் வெடிப்பதை பார்த்து துள்ளும்போது, சனியனே காசைக்கரியாக்காம ஒண்ணொண்ணா பிரித்து வெடிடா என்று தாத்தா திட்டிய...
மதியம் முழுக்க கட்டைப்பிரித்து ஒத்தை வெடி ஓடி ,ஓடி விட்டு கால் வலிக்க சந்தோஷித்த ...
ரெண்டு சீனி வெடியை சேர்த்து, கொட்டாங்குச்சி ஓட்டைக்குள், மண்ணைக்கவித்து அதில் சொருகி என வித விதமாக ரசித்துக்கொண்டாடிய...

நம் சரக்கு காலியானபின் அக்கம்பக்கத்தில் ஏதாவது தலைதீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதை அப்பாம்மாவுக்கு தெரியாமல் நம் கௌரவம் குறையாமல் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த...

"யார் வீட்டு வாசலில் பட்டாசு குப்பை ஜாஸ்தி ?"என்று கண்ணாலே எடை போட்டு "நாம் தான் டாப் "என்று மனசுக்குள் மார் தட்டிய....

தீபாவளி மலரை புது வாசனை மாறாமல் புரட்டி படம் பார்த்த....ஜோக் படித்த...

போஸ்ட்மேன் சாயங்காலம் கொண்டு வரும் வண்ண வண்ண வாழ்த்து அட்டைகளுக்காக காத்து நின்ற ....

அதிருஷ்டம் இருந்தால் புது ரிலீஸ்  அப்பா,அம்மா,அத்தை மாமா,பெரிப்ப,சித்தப்பா குடும்பங்களுடன் சேர்ந்து சோடா கலர் குடித்தபடி புது டிரஸ் அணிந்தபடி பார்த்த...
.
ராத்திரியில் சீக்கிரமே ஊர் களைப்பால் ஓய்ந்திட. நம்மை ஏக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த்தி நாம் அறியாமல் விடைபெற்ற 
அந்த தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் அனுப்பிவைங்களேன்....ப்ளீஸ் ....

2 comments:

  1. அந்த நாள் ஞாபகங்கள் ஒன்று விடாமல் அழகழகாக உங்கள் அனைத்து வரிகளிலும் பிரதிபலித்துள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ஆம் .... இவற்றில் பலவற்றை நாம் இன்று தொலைத்து விட்டோம்.

    இன்றும் தீபாவளி நடந்துகொண்டுதான் வருகிறது .... வேறு ஏதேதோ புதுமையான வழிகளில் ... தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் மட்டுமே.

    அருமையான இந்தப் பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  2. TRUE JI
    YOU WILL NEVER COME ACROSS THAT DEEPAWALI....

    ReplyDelete